Skip to main content

நாகர்கோயில் சுதர்சன் ஜவுளிக் கடையிலிருந்து சுரா எனும் இலக்கிய பேராண்மை

(பேராண்மை = prowess அல்லது அருந்திறம் என்ற பொருள் கொள்க)

 

நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு (Tower Junction) எனது சிறுவதிலேயே பரிச்சயமான ஒன்று. அங்குள்ள சுதர்சன் ஜவுளி கடையும் மிகப் பரிச்சயமான ஸ்தாபனம். எனது 44 - ஆவது வயதில் எனை ஒரு புதிய தமிழிலக்கிய வாசகன் என சொல்லிக்கொள்ளக் கூச்சப்பட வைக்கும் விஷயம், சுதர்சன் உரிமையாளர் மற்றும் தமிழ் கூறும் நல்லுலகின் இலக்கிய பேராற்றல், நவீன படைப்பிலக்கிய மேதை , சிந்தனையாளர் காலம் சென்ற சுந்தர ராமசாமி அவர்களை தெரியாமலிருந்ததும் அவரின் படைப்புகளில் ஒன்றைக் கூட அறியாமலிருந்தும் தான்.

 

சுரா பற்றிய ஜெயமோகனின் பேச்சுக்களை கேட்ட பிறகு ஒரு புளியமரத்தின் கதை நாவலை வாங்கி படித்தேன். சொல்லத்தகுந்த சிந்தனை நீட்சிகளையோ படைப்பிலக்கியவாதியின் அனுபவத்தைக் வாசகனுக்கு கடத்தும் வித்தையையோ அந்த வாசிப்பனுபவம் எனக்கு தர வில்லை என்ற போதிலும் இது ஒரு சாதாரண, எனக்கு இது வரையிலும் பரிச்சயமான மொழி நடையையோ கதையின் களத்தை , அது நடந்த காலச்சூழலை, அதன் கதாபாத்திரங்களை மிதமிஞ்சிய சொற்கோவைகளால், விவரிப்புகளால் , வாசகனை கற்பனா சக்திக்கு சிறிதும் இடம்தராத விதத்தில் எழுதப்பட்ட வணிகப் பிரசுரங்களிலிருந்து இது முற்றிலும் வேறு பட்டதென உணர்ந்தேன் .

ஜெயமோகனின்சுரா நினைவின் நதியில் படித்தபோது” ஜெயமோகனின் எழுத்திலும் ஒருமுறை படித்தால் மட்டும் மூளையில் ஏற்றிக்கொள்ளவியலாத மொழிநடையும் ஆழமான கருத்தாடல்களும் நின்று நிரவி நிற்பதுபோல் பட்டது. அவர் பல இடங்களில் சொல்ல எத்தனித்த, ஒப்புக்கொண்ட "தான் சுராவின் இலக்கிய வழித்தோன்றல்" என்ற விஷயம் பட்டவர்த்தனமாதும் சுராவைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள அவரின் படைப்புகளை தேடும் பிரயத்தனங்களை மேற்கொண்டேன். அப்படி நான் இந்தியாவிலிருந்து வாங்கி வரவழைத்த "காற்றில் கலந்த பேரோசை" என்ற கட்டுரைத் தொகுப்பு என்னை அவரது வாசகனாக்கியது மட்டுமல்ல இலக்கிய படைப்புகளை தரம் பிரிக்கும் தேவையை அவசியத்தை எனது "கிணற்றுத் தவளை" மனதுக்கு மண்டையில் கொட்டி கற்று கொடுத்தது. இத்தொகுப்பு சுரா 1963 முதல் 1996 வரை பல்வேறு சஞ்சிகைகளிலும் மேடைகளிலும் எழுதிய மற்றும் பேசியவைகளின் தொகுப்பு.

 

வாசகர்களின் மீது அவர் கொண்ட நம்பிக்கையை இதோ இப்படி பதிவிடுகிறார் "வாசகனின் எதிர்வினை ஆழமானதாகவோ ஆழமற்றதாகவோ இருக்கலாம். அவன் ஒரு திறந்த மனம் கொண்ட வரவேற்பாளன். அவன் எப்போதும் புதிய படைப்புத் திறனை அனுபவிக்கும் ஆவலுடன் இருக்கிறான்"

ஒரு படைப்பாளி எப்படி இருக்க வேண்டும் என்ற அவரது வரைமுறையை நான் மீண்டும் மீண்டும் படித்து மனதிலாக்கி வியந்து போனேன். ஒரு கவிதை வாசகனாக இருந்த என்னை மீண்டும் உரைநடையை நோக்கி இட்டுச் செல்லும் மிகச் சில ஆளுமைகளில் சுரா முக்கியமானவர். "தமிழ் மொழியில் கவிதையின் அந்திம கிரணங்கள் மலைமுகட்டில் விழுந்த பின் பிறந்தவன் நான். நான் வசனத்தின் குழந்தை" என்று சூளுரைத்து பாரதியின் கவிதை இலக்கியத்தை மட்டும் நுகர்ந்து கொண்டிருந்த என் போன்ற குறை குடங்களை அவரது வசன இலக்கியத்தை நோக்கி கையைப் பற்றியல்ல  காதுகளை  திருகி கூட்டிச் செல்கிறார்.

 

படைப்பாளிகளை சுரா இப்படி வகைப்படுத்துகிறார்

1. மார்க்சீயத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள்

2.  மார்க்சீயத்தை மறுக்க இயலாது தனக்கு உள்ளுணர்வுகளின் உந்துதல்களுக்கு கலையுருவம் கொடுப்பவர்கள்

3. கட்டுப்பெட்டிகளும் போலிகளும்

4. வியாபாரிகள்

45- ஆவது வயதிலாவது இதைப் புரிந்து கொண்டோமே என்ற ஆசுவாசமும் எம் பாதி வாழ்க்கையை இதில் 3 மற்றும் 4 ஆவது வகை படைப்பாளிகளை பின்தொடர்ந்தே போக்கி விட்டோமே என்ற இயலாமை உணர்வும் என்னை ஓரிரு நாட்கள் தூங்க விடாது செய்தன.

 

இனி வரப்போகும் இலக்கியப்  படைப்புகளை "பிரபஞ்ச யதார்த்தம்" எனும் அறிவியலும் ஆத்ம ஞானமும் கலந்த பேரரறிவு என்கிறார்.

 

ஏன் நவீன அறிவியல் இயற்கையோடு இயைந்து இருத்தலை போதிக்கிறது. ஏன் இந்த சமூகம் Hiking, Camping என்றெல்லாம் இயற்க்கையை தேடி ஓடுகிறது. 1982-ல் கோவையில் நடந்த இலக்கிய உரையில் சுரா இப்படி பதிலுரைக்கிறார்

" தனக்கும் பிற ஜீவராசிகளுக்கும் இயற்கைக்கும் பொதுவான ஏதோ ஒன்று இருப்பதான உணர்வு வெளிப்படுவதின் உருவங்களே சுயத்தைத் தாண்டி நிகழும் யாத்திரைகள். இதை பிரபஞ்ச உணர்வு என்று  சொல்லலாம்

இப்படி வாழ்க்கை போகிற போக்கில் நம்மைப் பார்த்து எறிந்து போகும் வினாக்களுக்கு கேட்காமலே விடை தருகிறார். மற்றொரு திரும்ப திரும்ப எழுந்து வரும் வாழ்வின் கேள்வி "ஏன் இயற்கையான மரணங்கள் கூட நம்மை சஞ்சல படுத்தும் புதுமையான நிகழ்வுகளாக தெரிகின்றன ?" இதை சுராவும் ஆமோதிக்கிறார் "மரணத்தை சகஜமாகக் கண்டு அதன் வருகை வரையிலும் முன்கூட்டிக் கணிக்க இயலாத வாழ்வின் இதழ் விரிப்புகளைப் புதுமையாகக் காண வேண்டிய நாம், அனைத்தையும் பழமையாகக் கண்டு ஆகப் பழமையான மரணத்தை மட்டுமே புதுமையாகக் காண்கிறோம்"

இந்த கட்டுரைத் தொகுப்பில் நான் குறைந்தது பத்து முறை படித்து இதோடு ஒரு தடவை எழுதி இன்னும் ஆழமான புரிதல் வேண்டி அணுகுகிற வரிகள் சுராவின் ஒரு கலைஞன் எப்படி கலை செய்ய வேண்டும் என்பது தான். இப்படி எழுதுகிறார் "கலைஞன் சிருஷ்டி கருமத்தில் முன்னேறும் போது, மனசை ஏற்கனவே பற்றியிருக்கும் முடிவுகள், தத்துவச் சாயல்கள் இவற்றைத் தாண்டி, சத்திய வேட்கை ஒன்றையே உறுதுணையாய் கொண்டதன் விளைவால், கலை சத்திய  வெற்றி பெற்று, குறுகிய வட்டங்களை நிரூபிக்கக் குறுகாமல் , அனுபவத்தின் நானாவிதமானதும் , மாறுபட்டதும் முரண்பட்டதுமான சித்திரங்களின் மெய்ப்பொருளை உணர்த்த வேண்டும்"

 

பெருவாரி வாசகர்களின் தாகம் தீர்க்க யத்தனிக்கும் வணிக நோக்கு கொண்ட படைப்பாளிகளை (4-ம் வகை)  பார்த்து இப்படி உமிழ்கிறார்

"சிருஷ்டியை அனுபவிக்க அக்கறை கொண்ட வாசகன் தன்னை அதற்கு ஏற்றார் போல தயார் செய்து கொள்ள வேண்டுமே தவிர, வாசகனின் தரத்தோடு சமரசம் செய்து கொள்வது இலக்கியகர்த்தாவின் நோக்கத்திற்கே நேர் எதிரானதாகும்"

 

இன்றைய சந்தைப் பொருளாதாரத்தை விளம்பர இரைச்சல்களுக்கிடையே ஊர்ந்து விழுந்து செல்லும் வாழ்வை இப்படி பதிவு செய்கிறார் "மனிதனின் மனத்தையோ அல்லது உடலையோ இதப்படுத்தும் என்று நம்பப்படும் பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட வண்ணம் இருக்கின்றன. இதன் அடிப்படை இலாப வேட்கை. இந்தப் பொருட்களைப் பாய்ந்து பிடிக்கும் அளவுக்கு வாழ்க்கையின் செழுமை கூடும் என்ற பேதலிப்பை மனித மூளைக்குள் தொடர்ந்து திணித்து வருகின்றன நவீன விளம்பர சாதனங்கள். நவீன விளம்பர சாதனத்திற்கு மனிதனும் ஒரு பண்டம். அந்த பண்டத்தைக் கொண்டு மற்றொரு பண்டம் வாங்கச் செய்வது அதன் வெற்றி"

 

நரை எட்டிப் பார்க்கும் இவ்வயதில் இதை நானறிதல் நன்றுதான் எனினும் இதை நான் எப்படி, என் பதின்ம வயது மகளுக்கு, விளம்பரங்களை சமூக ஊடக சந்தைப் படுத்தல்களை சகஜமாக நம்பி விடுகிற என் மகள் போன்ற இளைய பிள்ளைகளுக்கு, போதிப்பது ?

சுராவின் மரணம் பற்றிய இவ்வாறான விளக்கம் ஏனோ எனக்கு பகுத்தறிவு அல்லது அறிவார்ந்த சிந்தனை நோக்கிலிருந்து பார்க்கையில் உடன் பாடுடையதா எனத் தெரிய வில்லை "சக்தி உடலில் தேய்ந்து வர, சக்தியின் மறு உருவாக்கத்திற்கு உடல் திறனிழந்து நிற்கும் போது கூடும் அமைதியே மரணம்."

இப்படி என்னால் மேலும் சில பக்கங்கள் எழுத இயலும். இன்னும் சில முறையேனும் இந்த கட்டுரைத் தொகுப்பை படித்து விட வேண்டுமென நினைக்கிறேன்.

 

Comments

Popular posts from this blog

நீந்திக் கிழித்தல்

  ஏன் எந்த விளையாட்டு உபகரணமும் என் கையாடலில் உடைந்து அல்லது கிழிந்து போகின்றன ?   1. சிறு வயதில் , சுசீந்திரம் கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் கிரிக்கெட் bat உடைந்து போயிற்று 2. கிட்டத்தட்ட நாற்பதை நெருங்கும் வயதில் , கனடாவில் குடியேறிய பொழுதில் நண்பர் கார்த்தியுடன் ஆவேசமான டென்னிஸ் ஆட்டத்தில் ( ஒற்றயர் ஆட்டம் - எனக்கோ , நண்பருக்கோ விசேஷ டென்னிஸ்   பயிற்சி எதுவும் வாய்த்திருக்க வில்லை ) டென்னிஸ் Racquet - ஐ     உடைத்தாயிற்று 3. சில மாதங்களுக்கு முன்பு விலைகூடிய Badminton Racuqet ஒன்றை உடன் விளையாடும் நண்பரோடு விளைந்த எதிர்பாரா முட்டலில் (collission) உடைத்தாயிற்று 4. சில தினங்களுக்கு முன் Costa Rica- வின் Tamarindo   பசிபிக் கடற்கரையின் மிதமான அலைகளில் உருண்டு புரண்டு ஓடிக் களிக்கையில் ஏன் நீச்சல் கால் சட்டை கிழிந்து போயிற்று . பார்த்துக் கொண்டிருந்த   என் மனைவி ஏதோ Bollywood காதல் ஜோடிகளைக் கண்ணுற்ற வட இந்திய பத்திரிகையாளனை போல தாராளமாக படம் பிடித்து கொண்டாடினாள் . (புகைப்படம் கீழே )   எந்த வினைக

சிதம்பர நினைவுகள் – வாசிப்பனுபவம்

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்ற மலையாள கவியை ஒரு சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகன் என்ற அளவில் மாத்திரமே அறிமுகம். எங்களூர் எழுத்தாளரான ராம் தங்கத்தின் எழுத்துக்களை பிரசரித்த வம்சி புக்ஸ் நிறுவனம் வெளியிட்டதால் இந்த நூல் எனது வாசிக்கும் பட்டியலில் சேர்ந்தது. இதற்கு முன் Paulo Coelho வின் The Alchemist மற்றும் கல்பட்டா நாராயணன்   போன்ற சிலரின் மொழி பெயர்ப்புகளையே படித்துள்ளேன் . இதனை படித்து முடிக்கையில் Florida- வின் Miami நகரத்திலிருந்து Costa Rica- வின் Liberia வை நோக்கிய விமான பயணத்தில் பறந்து கொண்டிருந்தேன்.   படிக்க படிக்க மனித வாழ்க்கையின் மகோன்னதமான சில அனுபவங்களை, நேர்மையும், தன்னிலை சறுக்கல்களை மறைக்காத உண்மை உணர்வும் மேலோங்கிய கவி நேர்த்தி மிக்க கட்டுரைகளில் கரைந்து போனேன். Dr Paul Kalanithi- யின் When Breath Becomes Air - க்கு பிறகு, ஒரு நூலை படித்து என் கண்கள் குளமாகி போகும் உணர்ச்சி மேலிட்ட மனோநிலையில் ததும்பி வழிந்தேன். வானூர்தியின் சாளரத்துக்கு பக்கத்திலமர்ந்து    சினிமா பார்த்துக் கொண்டிருந்த என் மனைவியை தாண்டி வெளியே பார்க்கையில், அடர்த்தியான கரு மேக